ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சாமான்கள் சிக்கல்...! - 200 பயணிகள் 3 நாட்களாக காத்திருப்பு...!
Air India Express baggage problem 200 passengers waiting for 3 days
துபாயிலிருந்து லக்னோவுக்கு தினசரி சேவையை இயக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பெரும் அவமானத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 3ம் தேதி நள்ளிரவு புறப்பட்ட ஐஎக்ஸ்–198 விமானம், அதிகாலை 4.30 மணியளவில் லக்னோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் மகிழ்ச்சியுடன் இறங்கி, தங்கள் உடைமைகளை பெற பாகேஜ் பெல்டுக்கு சென்றனர்.

ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்தும், அவர்களின் உடைமைகள் வரவில்லை. அதற்கு பதிலாக, முந்தைய விமானமான ஐஎக்ஸ்194-ன் பைகள்தான் பெல்டில் சுழன்றுகொண்டிருந்தன! இதனால் குழப்பமடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், “உங்கள் சாமான்கள் சில தொழில்நுட்ப காரணங்களால் துபாயிலேயே தவறுதலாக இருந்து விட்டன; 12 மணி நேரத்திற்குள் வந்து சேரும்” என கூறி சமாதானப்படுத்தினர்.
ஆனால் அந்த 12 மணி நேரம் 24 ஆகி, பின்னர் 72 மணி நேரமாகியும், பைகளின் சுவடு கூட கிடைக்கவில்லை. பலர் தூரமான அசாம்கர், கான்பூர் போன்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தனர்.இதில் மிகச் சுவாரஸ்யமான,அதேசமயம் வருத்தமூட்டும், ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தன் உறவினர் திருமணத்திற்கு செல்லும் ஒரு பயணி, “விமானத்தில் சென்றதும் புதிய ஷெர்வானி, காலணிகளை அணிந்து பரிசுகளை எடுத்துச் செல்வோம்” என நினைத்து, அனைத்தையும் பையில் அடைத்து வைத்திருந்தார். ஆனால் அந்த பை துபாயிலேயே இருந்ததால், அவர் டி-ஷர்ட், ட்ராக் பேன்ட் அணிந்தபடியே திருமணத்திற்கு செல்வது தவிர வேறு வழியில்லாமல் போனது.
மொத்தம் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இதே நிலைமையில் சிக்கியுள்ளனர். மூன்று நாட்கள் கடந்தும் உடைமைகள் வராததால், கோபமடைந்த பயணிகள் சமூக வலைத்தளங்களில் #AirIndiaExpressFail என்ற ஹாஷ்டேக்குடன் விமர்சன மழை பொழிந்து வருகின்றனர்.
English Summary
Air India Express baggage problem 200 passengers waiting for 3 days