'அகமதாபாத்தில் விபத்துக்குள்ள விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பியதால், 2,000 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது'..? விமானிக்கு ராயல் சல்யூட் கூறும் இளைஞர்..!
A young man gives a royal salute to the pilot who diverted a crashed plane towards a hotel in Ahmedabad saving 2000 lives
கடந்த 12-ஆம் தேதி மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய அதிசயமும் இடம்பெற்றது.
இந்நிலையில், குறித்த விமானத்தை ஒட்டிய விமானி விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால் 2,000 பேர் பலியாகி இருப்பார்கள் என்றும், அவர்களை காப்பாற்றிய விமானிக்கு ராயல் சல்யூட் என்று இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர், இந்த விபத்தின் கோரத்தையும், ஒரு மிகப் பெரிய பேரழிவு எப்படித் தவிர்க்கப்பட்டது என்பதையும் விவரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ‘விமானம் வழக்கத்தை விட மிகத் தாழ்வாக பிறந்ததாகவும், தங்கள் தலைக்கு மேல் பறந்து சென்றது. அதை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடைசி நேரத்தில் விமானி விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால், அந்த விமானம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து 1500 முதல் 2,000 பேர் வரை இறந்திருப்பார்கள். ஒட்டுமொத்த காலனியும் அழிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதனால் அந்த விமானிக்கு ராயல் சல்யூட் என்றும், இறுதி நொடியில் அவர் விமானத்தை விடுதிப் பக்கம் திருப்பியதால்தான் மிகப் பெரிய சோகம் தவிர்க்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த விமானியால்தான் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம் என்றும், விமானம் மோதியவுடன் தீப்பற்றி எரிந்தது, அதில் சிக்கிய உள்ளூர் மக்கள் சுமார் 15 முதல் 20 பேரையும் நாங்கள் காப்பாற்றியதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இருந்தாலும், விமானியின் கடைசி நேர சமயோசிதத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது, இந்தத் துயரத்தின் மத்தியிலும் தியாகத்தின் சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது என கூறப்படுகிறது.
English Summary
A young man gives a royal salute to the pilot who diverted a crashed plane towards a hotel in Ahmedabad saving 2000 lives