'திமுக தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கிறது': ஹெச்.ராஜா..!
H Raja says DMK is opposing the special amendment due to fear of defeat
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோல்வி பயத்தால் திமுக எதிர்க்கிறது என்று காரைக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: டெல்லியில் கார் குண்டுவெடிப்பு என்பது பாஜக ஆட்சியில் 11 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு வெளியே நடைபெற்ற முதல் சம்பவம். நாட்டு நலனில் எள் முனை அளவுக்கு கூட அக்கறையற்ற திமுக, விசிக போன்ற கட்சிகள் வாக்கு நலனுக்காக தவறான கருத்தை விதைக்கின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், 15 கிலோ வெடிப்பொருள் வெடித்ததற்கே பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்த கைப்பற்றி 2,900 கிலோ வெடித்திருந்தால் என்னவாகி இருக்கும்..? என்றும், வெடிபொருள்களுடன் பயங்கரவாதிகள் கைது செய்தது மூலம் லட்சக்கணக்கான மக்களை பிரதமர் மோடியும், தேசிய உளவுத் துறையினரும் காப்பாற்றியுள்ளனர் என்றும் பேசியுள்ளார். ஆனால், மத்திய அரசை குறை கூறி திமுக, விசிக போன்ற கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று எச். ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்; பயங்கரவாதிகளிடமிருந்து ராணுவத்தில் இருக்கும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் 363 கிலோ கிடைத்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு சதி நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை காப்பாற்றத் தான் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் சாடியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்களை திமுகவினர் மொத்தமாக வாங்கிச் செல்கின்றதாகவும், தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார். வரும் 2026 தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய காங்கிரஸ், அங்கு 10 சீட்டுகளில் கூட வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு தீவிர திருத்தத்தால் பிஹாரில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்; ஜம்மு காஷ்மீர் மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாத சம்பவங்கள் இல்லை என்றும், அங்கு புதிய அரசு அமைந்த பிறகுதான் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் ஒரே மதத்தைச் சேர்ந்தோர் ஏன் பயங்கரவாதிகளாக உள்ளனர் என்பதற்கு ப.சிதம்பரம் பதில் கூற வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
H Raja says DMK is opposing the special amendment due to fear of defeat