பார்க்கிங் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மூக்கை கடித்த நபரால் பரபரப்பு..!
A man bit his neighbor's nose over a parking dispute caused a stir
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் நரமவ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பலர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு செயலாளராக ஆர்.எஸ். யாதவ் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே கிருஷ்ஜி மிஸ்ரா என்பவரும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு கிர்ஷ்ஜி மிஸ்ரா கார் பார்கிங் செய்யும் இடத்தில் வேறொரு கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. இதனால் மிஸ்ரா தனது காரை பார்க் செய்ய முடியாமல் இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மிஸ்ரா குடியிருப்பில் பூங்கா பகுதியில் அமர்ந்திருந்த ஆர்.எஸ். யாதவிடம் சென்று முறையிட்டுள்ளார்.

அத்துடன், அந்த கார் யாருடையது என கேட்டு யாதவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, குடியிருப்பு செயலாளர், அந்த கார் தன்னுடையது அல்ல, யாருடைய கார் என்று விசாரித்து அதை அங்கிருந்து எடுக்க சொல்வதாகவும் மிஸ்ராவிடம் கூறியுள்ளார்.
ஆனால், குடியிருப்பு செயலாளரின் பேச்சை ஏற்க மறுத்த மிஸ்ரா அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆர்.எஸ். யாதவின் மூக்கை மிஸ்ரா கடித்துள்ளார். இதில் காயமடைந்த யாதவ் அலறி துடித்துள்ளார்.
இதையடுத்து, யாதவின் குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A man bit his neighbor's nose over a parking dispute caused a stir