08-வது சம்பளக் கமிஷன்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு..?
08th Pay Commission Salary hike for central government employees and pensioners
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பு சம்பள கமிஷனாகும்.
இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 07-வது சம்பள கமிஷன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகவும், ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆகவும் பெற்று வருகின்றனர். இதனையடுத்து,08-வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு 08-வது சம்பளக் குழுவை அமைக்கும் திட்டத்தை கடந்த ஜனவரியில்அறிவித்தது. 07-வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் 08-வது மத்திய ஊதியக் குழுவின் பணி விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழுவில் தலைவர், ஓர் உறுப்பினர் (பகுதிநேர) மற்றும் ஓர் உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பாக 08-வது மத்திய ஊதியக் குழு இருக்கும். இது, ஆணையம் உருவாக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
எந்தவொரு சம்பளக் குழுவும் பொதுவாக அதன் அறிக்கையைத் தயாரிக்க 18 முதல் 24 மாதங்கள் ஆகும். பின்னர் அரசாங்கம் மறுஆய்வு மற்றும் இறுதி ஒப்புதலுக்கு மேலும் 03 முதல் -9 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த வகையில், இதேபோன்ற காலக்கெடு பின்பற்றப்பட்டால், 08-வது சம்பளக் குழுவின் அறிக்கை 2027க்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
08-வது சம்பளக் குழுவிலும், 07-வது குழுவில் இருந்த அதே நடைமுறை தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த முறை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை அதிகரிப்பதிலும், சிறிய கொடுப்பனவுகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஊதியக் குழுவின்கீழ் சம்பள உயர்வு முதன்மையாக ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஊதியக் குழுவில் பயன்படுத்தப்படும் ஃபிட்மென்ட் காரணி, அடிப்படை சம்பளத்தால் பெருக்கப்படுகிறது. அதாவது ஒருவருடைய அடிப்படை சம்பளம் 20,000 ரூபாயாகவும், ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆகவும் இருந்தால், 20,000 x 2.5 = 50,000 ஆக இருக்கும். இதன் பொருள் 20,000 ரூபாயின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக அதிகரிக்கும்.
அதன்படி, புதிய சம்பளக் குழுவிற்கான ஃபிட்மென்ட் காரணி 1.83 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் மத்திய அரசின் ஊழியர்களின் சம்பளம் 13% முதல் 34% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உண்மையான அதிகரிப்பு 08-வது சம்பளக் குழு பரிந்துரைகளை அங்கீகரிக்கும் போது அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது. இந்தப் புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary
08th Pay Commission Salary hike for central government employees and pensioners