ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் கூறும் ரகசியம்!! சித்தமருத்துவம்!!
sithamaruthuvam for human problems
சித்தர்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் வாழ்ந்து சமாதி அடைந்துள்ளனர். குறிப்பாக திருமூலர், ராமதேவர், அகத்தியர், கொங்கணவர், பாம்பாட்டி சங்கரன், போகர், பதஞ்சலி, தன்வந்திரி, குதம்பைச் சித்தர் போன்ற சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். நோயில்லாமல் உடலைப் பேணிக்காக்க சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதில் இன்றைய அவசரகால நடைமுறைக்கு ஏற்றவைகளும் இருக்கின்றன. காயகற்பம் - உடலைக்கல் போல் மாற்றும் முறையாகும்.
மூச்சுப்பயிற்சி - மூச்சை உள்ளடக்கி அதன் மூலம் ஆயுட்காலத்தைப் பெருக்கும் வழி. இவை இரண்டும் முக்கியமானவை. காயகற்பம் என்பது தினமும் நாம் சில வகை மூலிகைகளை தாதுப்பொருட்களை மருந்துகளை சில நியதிகளின்படி உண்ணும்போது எப்போதும் முதுமை வராமல் தடுக்க முடியும்.
எ.கா. இஞ்சித்தேன். இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஒரு மாதம் ஊறவைத்து உண்டு வாழ்ந்ததாக தேரன் கூறுகிறார். மேலும், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை தினமும் 20 நிமிடம் பழகும்போது எப்போதும் குழந்தை போல் இருக்கலாம் என்றும் கூறுகிறார். மேலும் நோய்கள் அணுகாதிருக்க, சித்தர்கள் கூறிய சில வாழ்க்கை முறைகளை நாம் பார்ப்போம்.

அதிகாலை எழுதல்: அதிகாலையில் எழுதல் அந்த நாளில் வேலையில் உள்ள சிக்கல்களைப் பகுத்தறிந்து, அதை சரி செய்யும் திறமையை ஊக்குவிக்கிறது. அதிகாலையில் விழிப்பவர்கள் சத்துள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாகவும் Northwestern uni*ersity-யில் நடந்த ஆய்வும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அதிகாலையில் (4-5 மணிக்குள்) துயிலெழ வேண்டும். அதனால், மனம் தெளிவடைந்து உடலின் ஆற்றல் பெருகும். இன்றைய காலத்திலும்கூட உலகில் சாதனை படைத்த பலர் அதிகாலையில் எழும் பழக்கம் உடையவர்கள்.
மலச்சிக்கலால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதைத் தீர்க்க அதிகாலையில் விழிக்க வேண்டும். சிறுகுடலுக்கான நேரம் 4-5 மணி. எனவே, அதிகாலையில் நம் உடலின் வெப்பம் குறைந்து மலம் இலகுவாகக் கழியும்.
காலைக்கடன் :மலம், சீறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. மலம், சிறுநீர் அடக்குவதால் கீழ்வாயு, நீர் எரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற உபாதைகள் ஏற்படும். ‘தினமும் மூன்று முறை மலமும் ஆறு முறை சிறுநீரும் கழிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்றும் கூறியுள்ளனர். மல இலகுவாகக்கழிய இரவில் அத்திப்பழம், பேயன்வாழை, உலர்திராட்சை போன்றவற்றை உண்ண வேண்டும்.
குளியல்: காலையில் குளித்தலே சிறந்தது. இதனால் நல்ல பசி ஏற்படும். நோய்கள் எல்லாம் நீங்கும். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் அக்குளின் கற்றாழை நாற்றம், வியர்வை, முகத்தில் ஏற்படும் நோய்கள் இவை நீங்கும். இதையே ‘காலைக் குளிக்கின் கடும்பசி நோயும் போம்’ என்று கூறினர்.
மேலும் பஞ்சகற்ப விதிப்படி குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது. கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு மிளகு இவற்றை பால் விட்டு அரைத்துக் கொதிக்கவைத்துத் தலையில் தேய்த்து முழுகி வர எந்த பிணியும் அணுகாது.
குளிப்பதற்கு சோப்புகள் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. இதற்கு மாற்றாக நலுங்குமாவு, பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம் சோரைக்கிழங்கு முதலியவற்றைப் பூசிக் குளிக்க மேனி பளபளக்கும். சருமம் சம்பந்தமான பிணிகள் நெருங்காது. மேலும் சருமநோயுள்ளோரும் சோப்புகள் பயன்படுத்துவதைத்தவிர்தது இந்த நலுங்கு மாவினைப்பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல்: எண்ணெய் தேய்த்து தலைமுழுகி வருவது பஞ்சேந்திரியங்களுக்கு பலம். தெளிவு, சிரசு, முழங்கால்களுக்கு வன்மை, ரோம வளர்ச்சி, நல்ல தொனி இவை உண்டாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் இது சிறந்த மருந்து. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும், பகல் தூக்கம் கூடாது. வெயிலில் செல்லக்கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.
உணவு: ‘உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்.’ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவு 2 முறைதான் உட்கொள்ள வேண்டும். 2 வேளை உண்ணும்போது உணவு, செரிமானம் ஆவதற்குத் தேவையான அளவு இடைவெளி கிடைக்கிறது. மல, நீர்கள் கழியவும் ஏதுவாகும்.
அதேபோல், முதல் நாள் சமைத்த உணவு அமுதாகவே இருந்தாலும் மறுநாள் உண்ணக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்பதால் உணவில் நச்சுத்தன்மை சேர்ந்து ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
English Summary
sithamaruthuvam for human problems