10 பேர் பலி, 200 போலி இணையதளங்கள் முடக்கம்! - இந்திய மருந்து பெயரில் அமெரிக்காவில் மரண வியாபாரம்!
Death trade US under name Indian medicine 10 dead 200 fake websites shut down
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகளவில் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன; குறிப்பாக அமெரிக்க சந்தையில் அவற்றுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. உயர்தர உற்பத்தி முறைகள், உலகத் தரச் சான்றிதழ்கள், குறைந்த செலவில் கிடைக்கும் சிகிச்சை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய காரணங்களால், இந்திய மருந்துகள் அமெரிக்க சுகாதார அமைப்பில் முக்கிய தூணாக மாறியுள்ளன.

ஆனால் இந்த நம்பிக்கையையே ஆயுதமாக மாற்றிய குற்றவியல் கும்பல் ஒன்று, போலியான ‘இந்திய மருந்துகள்’ என்ற பெயரில் இணையதளங்கள் வழியாக சட்டவிரோத வியாபாரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொண்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்க அதிகாரிகளை எச்சரிக்கையாக்கியது. இதையடுத்து அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிர விசாரணை நடத்தி, இந்தியாவின் அமலாக்கத்துறையுடன் இணைந்து தகவல்களை சேகரித்தது.
அதில், இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட சர்வதேச குற்றகும்பல், 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலம் போலி மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை அமெரிக்காவுக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வில் பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த மோசடி வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கையாக, 200 இணையதளங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன.
மேலும் நியூயார்க்கில் இருந்த இந்தியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உலகம் நம்பிய மருந்துப் பெயரை வைத்து நடந்த இந்த போலி வணிகம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Death trade US under name Indian medicine 10 dead 200 fake websites shut down