மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ்.(guillain-barre syndrome) பாதிப்பால் 12 பேர் பலி, 225 பேருக்கு நோய் தாக்கம்..!
12 people die 225 infected due to Guillain Barre Syndrome in Maharashtra
மகாராஷ்டிர மாநிலத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் தாக்கத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 225 பேருக்கு பாதிப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஜி.பி.எஸ். ( கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம்) என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இந்த பாதிப்பு உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஜிபிஸ் தாக்கத்திற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால், பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 06 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 06 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; இந்த பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

அதாவது, மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
12 people die 225 infected due to Guillain Barre Syndrome in Maharashtra