மாபெரும் வாய்ப்பை கோட்டைவிட்ட ஸ்டாலின்! வழ வழ, கொழ கொழ என திமுகவினரை ஏமாற்றிய ஸ்டாலின்!
murasoli office issue in social media
முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில் இது தான் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று ஆலாய்ப் பறக்கின்றனர்" என வரிவரியாக விளக்கம் கொடுத்த ஸ்டாலின் கடைசி வரை மூல பத்திரத்தை கொடுக்கவில்லை..
"முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று! முதலில், மரியாதைக்குரிய மருத்துவர் இராமதாசு அவர்கள், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்களும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.
மீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்!" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதேபோல, "21/10/2019 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.
04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்!
2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது" என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் "முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.
"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!" என, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்!" என ஸ்டாலின் எதனை எதனையோ கூறி வழ வழன்னு அறிக்கையை முடித்துள்ளார்.
முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என கூறும் ஸ்டாலின் தற்போதே அதனை நிரூபித்தால் குற்றம் சாட்டியவர்களுக்கு தானே பின்னடைவு, அதனை ஏன் ஸ்டாலின் செய்ய மறுக்கிறார் என்பதே திமுகவினரின் கேள்வியாக உள்ளது.
நறுக்கென மூல பத்திரத்தினை கொடுத்து முடிக்க வேண்டிய முரசொலி விவகாரத்தினை, தொடர்பே இல்லாமல் தேர்தல் வெற்றி, செம்பரம்பாக்கம் ஏரி, சிறுவன் சுஜித், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை, கழகத் தொண்டனின் உயிர் மூச்சு என அறிக்கையில் வழ வழன்னு பேசியிருப்பது திமுகவினரே ரசிக்கவில்லை என்பதே தகவலாக வருகிறது.
முரசொலி விவகாரத்தில் ஸ்டாலினின் வழ வழ கொழ கொழ விளக்கம் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதே திமுகவினரின் குமுறலாக உள்ளது. சமுக வலைத்தளங்களில் மூல பத்திரம் கேட்டு குடைச்சல் கொடுக்கும் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் திணறும் எங்கள் கஷ்டம் தலைவருக்கு எங்கே புரிய போகிறது என நொந்து போயுள்ளனர் திமுக இணையவாசிகள்..
மூல பத்திரத்தை காட்டி குற்றம்ச்சாட்டிய பாமக, பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த கிடைத்த அறிய வாய்ப்பினை ஸ்டாலின் கோட்டைவிட்டுள்ளார் என்கின்றனர் திமுக இணையவாசிகள். எங்க தான் இருக்கிறதோ அந்த மூல பத்திரம்... அப்படி அதில் என்ன தான் இருக்கிறதோ...
English Summary
murasoli office issue in social media