10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அரசு தீவிரம்! விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.!
Public Exam
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விரைவாக குறைந்து வருவதையடுத்து, 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 16-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நேரத்திலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த ஆண்டு பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் என அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
தற்போது பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் முதல் படியாக, 10 ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், மார்ச் மாதத்துக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் விரைவாக முடித்து 2-வது கட்ட திருப்புதல் தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களு சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த ஆலோசனையில் பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது? ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடுவதா? அல்லது தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்தும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக தேர்வு எழுத மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.