செல்போன் கேட்டு மிரட்டல்... மறுத்ததால்...? திருநங்கைக்கு தூத்துக்குடியில் நேர்ந்த கொடூரம் என்ன தெரியுமா...?
Threatened cellphone because she refused Do you know what atrocities happened transgender woman Thoothukudi
தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்ற 2 சிறுவர்களை காவலர்கள் விரைந்து சுற்றிவளைத்து கைது செய்தனர். காயமடைந்த திருநங்கை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47), புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று உணவகத்தின் அருகே சித்ரா நின்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் அவரை வழிமறித்து செல்போனை தருமாறு மிரட்டியுள்ளனர்.
சிறுவர்களின் மிரட்டலுக்கு சித்ரா பணிய மறுத்து செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்ராவை சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதில் அவரது வயிறு மற்றும் இடது முழங்கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சித்ரா நிலைகுலைந்து விழுந்ததை தொடர்ந்து, சிறுவர்கள் அவரது செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்து கிடந்த சித்ராவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு, அவசர ஊர்தி மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.பறிக்கப்பட்ட செல்போனின் தொடர்பு கோபுர இருப்பிடத் தகவலை காவலர்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்தனர்.
அதில், செல்போன் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து காவலர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற 2 சிறுவர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து சித்ராவின் செல்போன் மீட்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Threatened cellphone because she refused Do you know what atrocities happened transgender woman Thoothukudi