கேரளாவில் நள்ளிரவு நிகழ்ச்சி பரபரப்பு…! மருத்துவர் உட்பட 8 பேர் கையும் களவுமாக கைது...!
Midnight show stirs up excitement Kerala 8 people including doctor arrested red handed
கேரள மாநிலம் கொச்சி அருகே கடவந்தரா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இரவுநேர நிகழ்ச்சி, திடீரென காவல் சோதனையால் பரபரப்பான காட்சியாக மாறியது. அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி கடவந்தரா காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இன்ஸ்பெக்டர் பிஜு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் மற்றும் காவல் குழுவினர் ஓட்டலை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கொக்கைன், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற உயர்தர போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
சிலரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த விசாரணையில், இந்த போதைப்பொருட்கள் நிகழ்ச்சிக்காக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருவனந்தபுரம் சங்கமுகம் பகுதியை சேர்ந்த ஷாஜி பெர்னாண்டோ உட்பட, கலூர் பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ஜோஸ், வக்கீல் ரோஹித் நாயர், கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஜினோ முரளி, ஆலப்புழா நூரநாடு பகுதியை சேர்ந்த அக்பர் ஷா, பல் மருத்துவர் பென்சி ராவுத்தர், கொல்லத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சையத் அலி பாத்திமா, கல்லூரி மாணவர் அமல் ரவுப் ஆகிய 8 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இதில் 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.மேலும், இந்த போதைப்பொருட்களை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷோன் என்ற நபர் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே பகுதியில் உள்ள ஓட்டலில் இதேபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதிலும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.இந்த சம்பவம், கொச்சி நகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Midnight show stirs up excitement Kerala 8 people including doctor arrested red handed