“அழைத்தால் ஏன் வருகிறார்கள்?” – பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து சர்ச்சை கிளப்பிய சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் அதிர்ச்சி பேச்சு!
Why do they come when called Shocking speech by the president of the Short Film Producers Council that sparked controversy over sexual harassment of women
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் இன்று வீடு முதல் வேலை இடங்கள் வரை பரவலாக நடைபெற்று வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் குறிப்பாக திரைத்துறை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் மையமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு சிறு பட முதலீட்டாளர்கள் சங்கத் தலைவர் ஆர்கே அன்புசெல்வன், பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த கேள்விக்கு அளித்த அதிர்ச்சி கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, சில தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு, அன்புசெல்வன் அளித்த பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.
அவர் கூறியதாவது:“தயாரிப்பாளர்கள் கூப்பிடத் தான் செய்வார்கள், நானும் தான் கூப்பிடுவேன். அழைத்தால் ஏன் வருகிறார்கள்? வேறு தொழிலை பார்த்துக் கொள்ளலாமே? இதுதான் தொழில் என்று வரும்போது, ஒரு தயாரிப்பாளரை நோக்கி ‘ஏன் இப்படி செய்கிறாய்’ என்று நான் கேட்க முடியுமா?”
இந்த பொறுப்பற்ற பதில், சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. பலரும் “ஒரு சங்கத் தலைவர் எனும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படிப் பேசுவது மிகவும் அருவருப்பானதும், பெண்களுக்கு அவமதிப்பானதும்” எனக் கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர் —“இவ்வளவு மோசமான மனநிலை கொண்டவர்களிடம் இருந்து வரும் படங்களில் எத்தனை பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்? இப்படிப் பேசுபவர்களுக்கு எப்படி ஒரு சங்கத்தின் தலைமை பொறுப்பு வழங்கப்படுகிறது?”
மேலும், திரைத்துறையில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் வன்முறைகளை அரசு மட்டத்தில் விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கேரளாவில் போல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அன்புசெல்வனின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Why do they come when called Shocking speech by the president of the Short Film Producers Council that sparked controversy over sexual harassment of women