ஒன்றுமில்லா குற்றச்சாட்டு… உயிர் பறித்த விசாரணை...! - காவலர்களை நீதிமன்றம் சாடல்
baseless accusation investigation that claimed life court criticizes police officers
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், கோயிலில் நகை மாயமானது தொடர்பான புகாரில் கடந்த 2025 ஜூன் 27-ஆம் தேதி தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், மறுநாள் ஜூன் 28-ஆம் தேதி அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வெளிவந்த தகவல்களில், விசாரணை பெயரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலே அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.இந்த சம்பவம் காவல் மரணமாக மாறியதால் பரபரப்பு அதிகரித்தது.

இதுதொடர்பாக தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில், அது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், “அஜித்குமார் மரணம் தெளிவான காவல் மரணம்; வழக்கில் தொடர்புடையவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ‘நகை திருட்டு புகார் உண்மையா?’ என்ற நீதிபதியின் கேள்விக்கு, அது உறுதி செய்யப்படாத தகவல் என்றும், அறிக்கை தயாராகி வருவதாகவும் சி.பி.ஐ. விளக்கம் அளித்தது. இதைக் கேட்ட நீதிபதி, “ஆதாரமற்ற குற்றச்சாட்டில் ஒருவரை அடித்து கொன்றிருக்கிறீர்கள்; புகார் அளித்தவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதல்லவா?” என கடும் கண்டனம் தெரிவித்தார்.
முன்விரோதம் ஏதும் இல்லையெனவும், மேலதிகாரியின் உத்தரவின் பேரிலேயே விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், நீதிபதி, “யார் இருந்தாலும் சட்டம் முன் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த சம்பவம் மனதை பதற வைக்கிறது” எனக் கூறி வழக்கை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இந்த சம்பவம் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து சமூகத்தில் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
baseless accusation investigation that claimed life court criticizes police officers