“மகளுக்காக நாங்கள் இன்னும் பேசிக்கொள்கிறோம்” – ஜிவி பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி
We still talk for our daughter sake Sainthavi opens up about GV Prakash
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கிய இவர்களின் காதல், 2013ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு அன்வி என்ற மகளும் உள்ளார்.
இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிவை அறிவித்து விவாகரத்து பெற்றனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மகளின் நலனில் இருவரும் இன்னமும் இணக்கத்துடன் செயல்பட்டு வருவது பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சைந்தவி, மகளை வளர்ப்பதில் தாங்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வருகிறோம் என்பதை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:“என் மகள் என் வீட்டிலும் இருப்பாள், அவங்க அப்பா வீட்டிலும் இருப்பாள். அவள் என்னிடமிருந்து அங்கே செல்லும் முன்பே, இங்கே என்ன செய்தாள் என்று நான் அவரிடம் சொல்லிவிடுவேன். அதேபோல் அங்கே ஏதாவது சேட்டை செய்தால், அவர் உடனே எனக்கு ஃபோன் செய்து சொல்வார். மகள் வீட்டுக்கு வந்ததும், ‘அப்பா வீட்டில் ஏன் அப்படி செய்தாய்?’ என்று கேட்டால், ‘உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று ஆச்சரியப்படுவாள்,” என்று சிரித்தபடி பகிர்ந்தார்.
மேலும், “நாங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தால் பிரச்சனை வரும். அந்த சூழ்நிலையை எங்கள் மகளுக்கு கொடுக்கக்கூடாது என்பதில் நானும் அவரும் தெளிவாக இருக்கிறோம்,” என்றும் சைந்தவி கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரிந்த பின்னரும் மகளின் மனநிலையை பாதிக்காமல், பொறுப்பான பெற்றோர்களாக நடந்து கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பாராட்டி வருகின்றனர்.
இசையமைப்பாளராக பல வெற்றிகளை குவித்துள்ள ஜிவி பிரகாஷ், சமீப காலங்களில் மீண்டும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் சைந்தவியும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
We still talk for our daughter sake Sainthavi opens up about GV Prakash