“இனி அமைதியாக இருக்க மாட்டேன்” – பாலியல் தொல்லை விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை தொடங்கும் பாடகி ஸ்வாகதா!
I will not remain silent any longer Singer Swagata launches legal battle over sexual harassment
‘விக்ரம் வேதா’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘காயல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களிடம் பிரபலமானவர் பாடகி ஸ்வாகதா. தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் திரையுலகிலிருந்து விலகி வடஇந்தியாவில் செட்டில் ஆனது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஒரு பிரபல இசையமைப்பாளர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே தமிழ் சினிமாவை வெறுத்து விட்டு சென்றதாக ஸ்வாகதா கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் ‘காஸ்டிங் கவுச்’, அட்ஜஸ்ட்மென்ட் கலாசாரம் போன்ற பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், ஸ்வாகதாவின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் விவாதத்தை கிளப்பியது.
இதுவரை அந்த இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படையாக கூறாமல் இருந்த ஸ்வாகதா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:“எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் போராடினேன். என்னை மனதளவில் குணப்படுத்திக்கொள்ள நிறைய முயற்சிகள் எடுத்தேன். தற்போது தேவியின் அருளால் போராட வேண்டிய தைரியம் கிடைத்துள்ளது. இனி அமைதியாக இருக்க மாட்டேன். எனக்கு எதிராக நடந்த கொடுமைகளுக்கு சட்ட ரீதியாக போராடப் போகிறேன். இந்த தர்ம யுத்தத்தை நான் ‘மகிஷாசுர மர்த்தனம்’ என்று அழைக்க விரும்புகிறேன். நீதி இன்னும் கிடைக்கவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்வாகதாவுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், “மறைமுகமாக பேசாமல் அந்த இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படையாக சொல்ல வேண்டும்” என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், பலரும் “பாதிக்கப்பட்டவர் பேச தைரியம் எடுத்திருப்பதே முக்கியம்” என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பாடகி ஸ்வாகதா தொடங்க உள்ள இந்த சட்டப் போராட்டம் தமிழ் திரையுலகில் மேலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
I will not remain silent any longer Singer Swagata launches legal battle over sexual harassment