சிம்புவுக்காக ஆண் குரலில் பாடிய எஸ். ஜானகி..இன்றுவரை கொண்டாடப்படும் பாடல்! பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?
S Janaki who sang in a male voice for Simbu a song that is celebrated to this day Do you know the story that became a hit all over the country
பாடகி எஸ். ஜானகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்ததற்கு, அவரது அபாரமான குரல் மாற்றுத் திறமையே முக்கிய காரணமாக அமைந்தது. வயது, பாலினம், கதாபாத்திரத்தின் மனநிலை என எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு குரலை முழுமையாக மாற்றி பாடுவதில் அவர் நிகரற்றவர். 60 வயது மூதாட்டியின் குரலாக இருந்தாலும், 6 வயது மழலை குழந்தையின் குரலாக இருந்தாலும், அதை இயல்பாக வெளிப்படுத்தியவர் ஜானகி.
அந்த வரிசையில், நடிகர் சிலம்பரசனுக்காக (சிம்பு) அவர் பாடிய ஒரு பாடல் இன்று வரை கிளாசிக் ஹிட் ஆக பேசப்படுகிறது. இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசனை சிறுவயதிலிருந்தே திரையுலகில் அறிமுகப்படுத்தினார். 1989ஆம் ஆண்டு வெளியான ‘சம்சார சங்கீதம்’ திரைப்படத்தில் தந்தை–மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்ததும் டி. ராஜேந்தரே.
இந்த படத்தில் இடம்பெற்ற “ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்… ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்” என்ற பாடல், சிம்புவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. மழலைத் தனமும், உற்சாகமும் நிறைந்த இந்தப் பாடல், வெளியான உடனேயே பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பாடலின் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அதை பாடியது எந்தக் குழந்தையும் அல்ல. தனது குரலை முழுமையாக மாற்றி, ஆண் குழந்தையின் மழலைக் குரலாக பாடியவர் எஸ். ஜானகி தான். இந்தப் பாடல், சிம்புவின் ஆரம்ப கால அடையாளமாகவும், அவரது ரசிகர்களிடையே மறக்க முடியாத நினைவாகவும் மாறியது.
இதுபோல், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினிக்காகவும் பல படங்களில் ஜானகி மழலை குரலில் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அதற்கு முன்பே, 1981ஆம் ஆண்டு பாக்யராஜ் நடித்த ‘மௌன கீதங்கள்’ படத்தில் இடம்பெற்ற “டாடி டாடி ஓ மை டாடி” பாடலும் சிறுவன் குரலில் பாடப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடலையும் பாடியது எஸ். ஜானகி என்பதும் பலருக்குத் தெரியாத சுவாரசியமான தகவல்.
அதேபோல், ரஜினிகாந்த் நடித்த ‘ரங்கா’ படத்தில் வரும் “பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா” பாடலும், குழந்தை குரலில் பாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதுவும் ஜானகியின் குரல் மாயாஜாலத்தின் இன்னொரு உதாரணமாகும்.
ஒரே குரலில் பல வயதுகளையும், பல கதாபாத்திரங்களையும் உயிர்ப்பித்த எஸ். ஜானகி, தனது அசாத்திய திறமையால் காலத்தை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இசை ஜாம்பவானாக இன்று வரை திகழ்கிறார்.
English Summary
S Janaki who sang in a male voice for Simbu a song that is celebrated to this day Do you know the story that became a hit all over the country