கணவர் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது..விவாகரத்து பற்றி லதா ரஜினிகாந்த் கருத்து: யாரை குறிக்கிறாரா?
Nothing can be achieved without a husband Latha Rajinikanth comment on divorce Who is she referring to
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படம் வெளியாகிய பிறகு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கூலி’ படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் மூலம் ரஜினி மீண்டும் வெற்றியைப் பெறுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது.
இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் மற்றொரு படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்திற்கு தற்காலிகமாக KHXRK என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக தனது இடத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் இயக்கிய லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சமுடு நடிக்கும் ‘டெக்ஸ்லா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
அவர் பேசுகையில்,“ஒரு குடும்பத்தில் கணவரின் ஆதரவு இல்லாமல் ஒரு பெண் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாது. குடும்பத்தினர், அண்ணன், தங்கை, குழந்தைகள் என அனைவரும் ஊக்கம் கொடுத்தால் தான் ஒரு பெண் முன்னேற முடியும். முதலில் என் கணவருக்கு தலைவணங்கி நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் நலமாக நினைக்கும் மனசு அவருக்கு இருக்கிறது. எனது முயற்சிகள் அனைத்தையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் விவாகரத்து குறித்து அவர் கூறிய கருத்தும் கவனத்தை ஈர்த்தது.“விவாகரத்து நடப்பதும், நடக்காததும் சூழ்நிலை மற்றும் ஒவ்வொருவரின் மனப்பான்மையைப் பொறுத்தது. அந்த காலத்தில் பல அழுத்தங்களை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. இன்றும் பலர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். இரண்டு மனங்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பு தான் முக்கியம்” என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கோலிவுட்டில் விவாகரத்து தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், லதா ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்து யாரை குறிப்பிட்டு சொன்னது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
English Summary
Nothing can be achieved without a husband Latha Rajinikanth comment on divorce Who is she referring to