ஊர் திருவிழா.. திருவிழாவின் கடைசி நாள் தான் குதூகலமே.. மஞ்சள் நீராட்டு..!
manjal neerattu vizha in thiruvizha
மாவிளக்கு போடுதல் :
தீர்த்தக்குடம் எடுத்தலுக்கு அடுத்த நாள் மாவிளக்கு பூஜை நடைபெறும். பச்சரிசி மாவில் விளக்கு செய்து திரிபோட்டு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார்கள். ஒரு அகன்ற தாம்பூலத்தட்டில் தேங்காய், வாழைப்பழம், மாவிளக்கு, வெற்றிலைப்பாக்கு வைத்து ஊரைச் சுற்றி கோலாகலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள்.
அக்னி;சட்டி மற்றும் அலகு குத்துதல் :
ஊர் பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை தீர்க்க திருவிழா நாளில் அக்னிசட்டி எடுப்பார்கள். பானையில் தீக்கனலை நிரப்பி அதை வேப்பிலை நிரப்பிய கைகளால் தூக்கி, பம்பை சத்தம் முழங்க ஊரைச் சுற்றி வருவார்கள். மற்ற சில மக்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.
தீமிதிவிழா அல்லது தேர்த்திருவிழா :
அந்தந்த ஊர்களின் வழக்கப்படி தீமிதிவிழா அல்லது தேர் இழுத்தல் போன்ற விழாக்கள் நடைபெறும். திருவிழாவின் கடைசி நாளுக்கு 2 நாள் முன்னர் கோவில் வாசலில் தீமூட்டி அணைந்ததும் அதன் தீக்கனலில்; ஊரில் உள்ள நேர்த்திக்கடன் செலுத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் பேதமில்லாமல் இறங்கி நடந்து வருவார்கள். சில ஊர்களில் அம்மனை தேரில் வைத்து குறிப்பிட்ட இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இழுத்து வருவார்கள். அவ்வாறு வருகையில் ஊர் மக்கள் அனைவரும் ஆடிப்பாடி கொண்டாடுவார்கள்.
பொங்கல் வைத்தல் மற்றும் கிடா வெட்டுதல் :
பொங்கல் வைத்தல் என்பது பச்சரிசியில் வெல்லம், நெய் ஆகியவற்றை போட்டு சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் பச்சரிசியை வைத்து வெண்பொங்கலாகவும் வைப்பர். பிறகு கிடா வெட்டுதல் சடங்கு நடைபெறும்.
மஞ்சள் நீராட்டு விழா :
திருவிழாவின் கடைசி நாள் மஞ்சள் நீராட்டு விழா. கம்பம் மற்றும் கும்பத்தை கோவிலிருந்து அருகில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் கொண்டு போய் கொண்டாட்டத்துடன் போடுவார்கள். அதனுடனேயே வீட்டில் வளர்த்த முளைப்பாரியையும் போட்டுவிடுவார்கள். பிறகு மஞ்சள் கரைத்த தண்ணீரைக் கொண்டு உறவினர்கள் மற்றும் அனைவரும் மற்றவர் மேல் ஊற்றி ஆடிப்பாடி விளையாடுவார்கள். இத்துடன் அவ்வூரின் திருவிழா கொண்டாட்டம் முடிவடையும்.
English Summary
manjal neerattu vizha in thiruvizha