பஸ்ல போகும்போது அது எனக்கு நடந்தது..மறக்கவே முடியாத ரணம்.. ரேவதி மனம் திறந்த பேட்டி!
It happened to me while I was going on the bus an unforgettable experience Revathi candid interview
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஸ்ஸி’ பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டாப்ஸி பன்னு, கனி குஸ்ருதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நசிருதீன் ஷா, சுப்ரியா பதக், சீமா பார்கவா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளனர். இப்படம் குறித்து நடிகை ரேவதி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில், ‘அஸ்ஸி’ என்ற தலைப்பின் பொருளை விளக்கிய ரேவதி, “அஸ்ஸி என்றால் தமிழில் 80. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக குறைந்தது 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், FIR போடப்படாத சம்பவங்கள் இதைவிட பல மடங்கு அதிகம். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறாள். இந்த சமூக உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இப்படத்திற்கு ‘அஸ்ஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இப்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு ‘குட் டச் – பேட் டச்’ பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுக்காவிட்டாலும், நம் உடலுக்கே தெரியும் ஒருவர் நல்ல எண்ணத்தில் தொடுகிறாரா, தவறான எண்ணத்தில் தொடுகிறாரா என்று. தவறான தொடுதல் நடந்தால், அதை தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
பெண்கள் எதிர்கொள்ளும் சமூக மனப்பான்மை குறித்து வேதனையுடன் பேசிய ரேவதி, “ஒரு பெண் தன்னிடம் தவறாக நடந்ததாக சொன்னால், முதலில் கேட்பது ‘நீ ஏன் அந்த மாதிரி டிரஸ் போட்டாய்?’ என்பதுதான். இதுபோன்ற கேள்விகளால் பல பெண்கள் பயந்து, நடந்த சம்பவங்களை மனதுக்குள் அடக்கிக் கொண்டு மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஒரு பெண்ணின் உடலை தவறாக தொடுவது, அவளுடைய வாழ்க்கையில் ஆறாத ரணமாக மாறிவிடும்” என்றார்.
பெற்றோரின் பங்கு குறித்து வலியுறுத்திய அவர், “இத்தகைய நேரங்களில் பெற்றோர் குழந்தைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். யாராவது தவறாக நடந்துகொண்டால், அந்த இடத்திலேயே எதிர்த்து நிற்கவும், தேவையெனில் அடிக்கவும் தைரியம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தன் வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்த ரேவதி, “நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது பேருந்தில் ஒருவர் என்னை தவறாக தொட்டார். நான் பயப்படவில்லை. அந்த இடத்திலேயே அவரை அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மாதான். ‘யாராவது தவறாக நடந்தால் பயப்படாதே’ என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இப்படியான ஆதரவு ஒவ்வொரு பெண்ணுக்கும் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து சமூகத்தை சிந்திக்க வைக்கும் படமாக ‘அஸ்ஸி’ இருக்கும் என்று ரேவதியின் இந்த பேச்சுகள் உணர்த்துகின்றன.
English Summary
It happened to me while I was going on the bus an unforgettable experience Revathi candid interview