பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டில் ஊழியர்கள் கவனக்குறைவு; 130 அடி உயரத்திலிருந்து விழுந்து இளம் பெண் பரிதாப பலி; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!
Young woman dies after falling 130 feet during a bungee jump in Brazil due to staff negligence
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன் பிரிட்ஜ்' பகுதியில், ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பங்கி ஜம்ப் விளையாட்டில் மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீடாஸ் என்ற 21 வயது இளம்பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளியில் பாதுகாப்பு கயிறு இணைக்கப்படவில்லை என்பதை அறியாமலேயே, ஊழியர்கள் அப்பெண்ணை பாலத்தின் விளிம்பிற்கு தூக்கி சென்று கீழே வீசியுள்ளமை பதிவாகியுள்ளது. தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற இந்த காணொளியை பார்ப்போருக்கு பதைபதைப்பை உருவாக்கியுள்ளது.

இதன்பின்னர் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக 'லீகல் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்' மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு சற்று முன்புதான் மரியா அந்த இடத்திலிருந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருகிறார். அவற்றில் அந்தப் பாலத்தையும், அவர் கையில் அணிந்திருந்த 'ஜம்ப்' மணிக்கட்டுப் பட்டைகளையும் காட்டும் படங்கள் இடம்பெற்றன. இந்த விபத்து குறித்த செய்தி வெளியான பிறகு, அவரது அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் நடந்தபோது மரியாவின் வருங்கால கணவரும் அங்கேயே இருந்துள்ளார். மரியாவின் இறப்புச் செய்தியை அறிந்ததும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Young woman dies after falling 130 feet during a bungee jump in Brazil due to staff negligence