இதென்னடா சோயாபீன்ஸ்-கு வந்த கொடும...!விவசாயிகள் நலனுக்காக சீன அதிபரை நேரில் சந்திக்கப் போகும் டிரம்ப்...!
Trump to meet Chinese President in person for farmers welfare
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரஸ்பர வரிகள் விதித்தது சர்வதேச வர்த்தகத்தில் பெரிய அதிர்வலை கிளப்பியது. இதன் தாக்கமாக, அமெரிக்க சோயாபீன்ஸ் இறக்குமதியை சீனா திடீரென நிறுத்தியது.மேலும், சோயாபீன்ஸ் கொள்முதலில் சீனாவே முக்கிய பங்காற்றி வந்ததால், இந்த முடிவு அமெரிக்க விவசாயிகளை கடுமையாக சிக்கலில் தள்ளியது.

இந்த ஏற்றுமதி தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில், டிரம்ப் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்திக்க உள்ளதாகவும், அங்கு சோயாபீன்ஸ் தொடர்பான பிரச்சினையே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், தனது சமூக வலைதள பதிவில் டிரம்ப் தெரிவித்ததாவது,"சீனா நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்க மறுத்ததால், நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கவலைப்பட வேண்டாம். வரிகள் மூலம் அமெரிக்கா ஏற்கனவே பெரிய அளவில் வருவாய் ஈட்டியுள்ளது.
அந்த தொகையில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு நேரடி உதவியாக வழங்குவோம்.நான் எப்போதும் நமது விவசாயிகளின் பக்கமே நிற்பேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் விட்டது ஜோ பைடனின் தவறு. ஆனால், நான் நமது தேசபக்தர்களையும் விவசாயிகளையும் காக்கிறவன்.
அடுத்த நான்கு வாரங்களில் ஜி ஜின்பிங்கை சந்தித்து, விவசாயிகளின் நலனுக்காக உரிய தீர்வை கண்டுபிடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Trump to meet Chinese President in person for farmers welfare