03-ஆம் உலக நாட்டினர் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை ..? டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!
Trump announces a permanent ban on immigration to the United States for third world countries
அமெரிக்கா, வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா அரசு உத்தரவிட்டதோடு, க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், 03-ஆம் உலக நாட்டினர் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியுள்ளதாவது;
''தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறியிருந்தாலும், குடியேற்றக் கொள்கை பலரின் ஆதாயங்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் அரித்துவிட்டது. அமெரிக்காவை முழுமையாக மீட்கும் வகையில், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்வை நிரந்தரமாக இடைநிறுத்துவேன்.

நம் நாட்டின் குடிமக்களாக இல்லாதவர்களுக்கு அனைத்து சலுகைகள் மற்றும் மானியங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். மேற்கத்திய நாகரீகத்துக்கு பொருத்தமில்லாத, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாட்டினரும் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.'' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 03-ஆம் உலக நாடுகள் எவை என்று அந்த பட்டியலையும் டிரம்ப் வெளியிடவில்லை. அத்துடன் ஆப்கான் போன்ற நாடே அவர் எந்த அடிப்படையில் 03-ஆம் உலக நாடுகள் என்று வகைப்படுத்தியுள்ளார் என்பது பற்றிய தகவல்களும் அதில் இடம்பெறவில்லை.
கடந்த ஜூன் 2025 உத்தரவில், டிரம்ப் நிர்வாகம் சில நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump announces a permanent ban on immigration to the United States for third world countries