ஈரான் இதுவரை துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது 541 ட்ரோன்கள், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவி ஏவியுள்ளது; ஐக்கிய அரபு அமீரகம் தகவல்..!
The United Arab Emirates has reported that Iran has so far launched 541 drones and 165 ballistic missiles at cities including Dubai and Abu Dhabi
துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் இதுவரை 541 ட்ரோன்கள், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
அதன்படி, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்தியர்கள் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 58 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரானியப் படைகளால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் மிக வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை நடைபெற்ற இரண்டாவது நாள் தாக்குதலின் போது, அமீரக வான் பாதுகாப்புப் படை 20 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானிலேயே அழித்ததுடன், மேலும் 08 ஏவுகணைகள் கடலில் விழுந்தன என்று குறிப்பிட்டுள்ளது.
02 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 311 டிரோன்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக 21 டிரோன்கள் பொதுமக்களின் குடியிருப்புகளைத் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், கடந்த 2026 பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த ஈரானியத் தாக்குதல்களில், இதுவரை மொத்தம் 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 152 ஏவுகணைகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 13 ஏவுகணைகள் கடல் பகுதியில் விழுந்தன என்றும், ஏவப்பட்ட 02 குரூஸ் ஏவுகணைகளும் முழுமையாகத் தகர்க்கப்பட்டன என்று அறிவித்துள்ளது.
இந்த டிரோன் தாக்குதல்களைப் பொறுத்தவரை, இதுவரை கண்டறியப்பட்ட 541 டிரோன்களில் 506 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், 35 டிரோன்கள் நாட்டின் நிலப்பரப்பில் விழுந்து வெடித்ததில் சில பகுதிகளில் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை, எகிப்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கும் போது சிதறிய பாகங்கள் விழுந்ததில், சில சிவில் கட்டிடங்களுக்குச் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஐக்கிய அரபு அமீரகம் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தங்கள் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாகத் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இதேநேரம், பொதுமக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையோ அல்லது வதந்திகளையோ நம்ப வேண்டாம் என்றும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வச் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
The United Arab Emirates has reported that Iran has so far launched 541 drones and 165 ballistic missiles at cities including Dubai and Abu Dhabi