அரச குடும்பத்தில் அதிர்ச்சி...! அதிகார துஷ்பிரயோக வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூ கைது...!
Shock royal family Prince Andrew arrested abuse power case
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த கடும் சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் III அவர்களின் சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரிட்டனின் வர்த்தகத் தூதராக பணியாற்றிய காலத்தில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருக்கு ரகசிய அரசுத் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகாரின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் வசித்து வரும் நார்ஃபோக் பகுதியிலுள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து தேம்ஸ் வேலி காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஏற்கனவே எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவிடமிருந்து ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ போன்ற அரச மரியாதைப் பட்டங்களை, மன்னர் சார்ல்ஸ் கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது 66-வது பிறந்தநாளிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. “சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை” என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டின் பேரில், நார்ஃபோக் பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை கைது செய்துள்ளோம்.
பெர்க்ஷயர் மற்றும் நார்ஃபோக் பகுதிகளில் உள்ள பல முகவரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயரை வெளியிட இயலாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாத வகையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
உதவி தலைமை காவல்துறை அதிகாரி ஆலிவர் ரைட் விளக்கமளிக்கையில், “அரசுப் பதவியின் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இந்த விசாரணையின் நேர்மை மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதி செய்வது எங்களது முதன்மை கடமை. மேலும், பொதுமக்களின் ஆர்வத்தை புரிந்துகொள்கிறோம்; உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.இந்த கைது நடவடிக்கை, பிரிட்டன் அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது.
English Summary
Shock royal family Prince Andrew arrested abuse power case