அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைத்துள்ள பாகிஸ்தான்: உள்நாட்டிலேயே கடுமையான விமர்சனம்..!
Pakistan announces nomination of Trump for Nobel Prize
'நோபல் பரிசு' தனக்கு தரவில்லை என்று புலம்பி தீர்த்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு , அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்து ஆறுதல் அளித்துள்ளது.
பஹல்காம் சம்பவத்தை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த சூழலுக்கு மத்தியில் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த முடிவை எடுத்தன. ஆனால், அமெரிக்காவின் முயற்சியால் தான் போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியானதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், அதனை இந்தியா முற்றிலும் மறுத்தது.

இந் நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலை தீர்க்க உதவியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
டிரம்பின் ராஜதந்திரமான தலையீடு மற்றும் தலைமைத்துவம் மூலம் இந்தியா, பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அத்துடன், கண்ணியமான முறையில் சமாதானத்தை நிலைநாட்டியவர் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை மேற்கொள்வதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஏனெனில்,காசா இனப்படுகொலை, ஈரான் மீது இஸ்ரேல்குண்டு தாக்குதல் போன்றவற்றுக்கு டிரம்ப் அளித்த ஆதரவை மேற்கோள் காட்டி இந்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் அமைதிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கப் போவதில்லை என்று டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைதளத்தில் புலம்பி வந்தார். இவருடைய புலம்பல் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan announces nomination of Trump for Nobel Prize