வர்த்தகத்தில் புதிய பதட்டம்! அனுமதி இல்லையெனில் பயணம் இல்லை...! - ஹார்முஸ் ஜலசந்தியில் பாகிஸ்தானுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
New tension trade No travel without permission Iran warns Pakistan Strait of Hormuz
மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம், கடல் வர்த்தகத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி இன்றி பயணம் மேற்கொண்ட கண்டெய்னர் கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான மோதல் மூன்று வாரங்களை கடந்துள்ள சூழலில், உலகின் முக்கிய கடல் பாதையாக விளங்கும் இந்த நீர்வழியில் பாதுகாப்பு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வழித்தடத்தில், ஒவ்வொரு கப்பலின் இயக்கமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடற்படைத் தளபதி அலிரேசா தாங்சிரி விளக்கமளிக்கையில், “சட்ட நெறிமுறைகளை பின்பற்றாததாலும், முன் அனுமதி பெறாததாலும், பாகிஸ்தான் நோக்கி சென்ற கப்பல் தடுக்கப்பட்டது. ஹார்முஸ் வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் கடல் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பாதுகாப்பு முயற்சியாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம், நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா இந்தப் பகுதியில் தனது ராணுவப் பதற்றத்தை மேலும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மூலம் போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயக்கம் காட்டி வருகிறது. இது மேற்காசியாவின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
English Summary
New tension trade No travel without permission Iran warns Pakistan Strait of Hormuz