''டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்''; இந்திய கம்யூ..!
Indian Communist Party calls for reconsideration of K Venkata Narayanas appointment as Delhi Special Representative
தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுள் ஒன்றான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ''டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர்,மு. வீரபாண்டியன், விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

''தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் திரு வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்து கொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Indian Communist Party calls for reconsideration of K Venkata Narayanas appointment as Delhi Special Representative