75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆண்டு சிசு!
lithopedion
அல்ஜீரியாவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், வயிற்று வலியால் மருத்துவமனை சென்றபோது சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவரது உடலுக்குள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு, கால்சியக் கல்லாக மாறி இருந்தது தெரியவந்துள்ளது.
மூதாட்டி, கருப்பை வெளியே கர்ப்பம் ஏற்பட்ட நிலையில், சிசுவுக்கு ரத்த ஓட்டம் கிடைக்காததால் 7 மாதத்தில் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிசு உடலிலிருந்து வெளியேறாத காரணத்தால், தொற்று ஏற்படாமல் தடுக்க, தாயின் உடலே தற்காப்பு முறையாக அதனை கால்சியக் கல்லாக மாற்றியுள்ளது. இதையே “லிதோபீடியான்” (lithopedion) என்று அழைக்கிறார்கள்.
தற்போது அந்த சிடி ஸ்கேன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், பலரும் இது உண்மையா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேபோல், 2013ல் கொலம்பியாவில் 40 ஆண்டுகள் வயிற்றில் இருந்த குழந்தை கல் போல மாறியதாக பதிவாகியிருந்தது. 1996 வரையிலான உலகளாவிய மருத்துவ பதிவுகளின் படி, 290 லிதோபீடியான் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் கண்டறியப்படாதவை இன்னும் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.