2 ஹெல்மெட்கள், ABS கட்டாயம் - மத்திய அரசு முடிவு!
bike helmet central govt
மத்திய அரசு புதிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது, இரண்டு ஹெல்மெட்களை கட்டாயமாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது, மோட்டார் வாகன விதிகள் 1989-இல் செய்யப்படவுள்ள திருத்தங்களில் புதிதாக சேர்க்கப்பட உள்ள விதி ஆகும்.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த விதி அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியான நாள் முதல் மூன்று மாதங்களுக்குள் அமலுக்கு வரும். ஓட்டுநரும், பின் பயணிப்பவரும் இருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையே இந்த முடிவின் நோக்கமாக அரசு கூறியுள்ளது.
வாகனத்துடன் வழங்கப்படும் ஹெல்மெட்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரச்சான்று பெற்றவை ஆக வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129-இன் கீழ் விலக்கு பெறுபவர்கள் இந்த விதியில் இருந்து விலக்கப்படுவார்கள்.
மேலும், 2026 ஜனவரி 1 முதல், 50cc-ஐ கடந்த எஞ்சின் திறன் அல்லது 50 கி.மீ/மணிக்கு மேல் வேகமுடைய அனைத்து புதிய L2 வகை பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக்கப்படவுள்ளது. இது திடீர் பிரேக்கிங்கின் போது வாகன கட்டுப்பாட்டை மேம்படுத்தி, சறுக்குவதை தடுக்கும்.
இந்த முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன. அவற்றை [comments-morth@gov.in](mailto:comments-morth@gov.in) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.