உழைப்போம்.... உயர்வோம்... இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..!!
Labour Day 2021
உலக தொழிலாளர் தினம்:
இத்தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம்.
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.
தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது.
தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை.
ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.
இன்றைக்கு அனைவரும் எட்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள். பள்ளி வகுப்புகள் அதிகபட்சமாக எட்டு மணி நேரமே நடக்கின்றன. இந்த எட்டு மணி நேர வேலை முறையை நடைமுறைப்படுத்த பல்லாயிரக்கணக்கானோர் போராடியிருக்கிறார்கள். பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராட்டங்களை நினைவுக்கூறும் விதமாகவே மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் தினம் எப்படி வந்தது?
தொழிலாளர்கள் விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதை உணர்ந்து அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடினர்.
அதன்படி 1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ என அமெரிக்கா முழுவதும் 3,00,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தம் துவங்கியது.
இந்த வேலைநிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலைநிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து 'அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு" என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.