கத்தாரில் அமெரிக்க படைத்தளம் ஈரான் ஏவுகணை தாக்குதல்; வான்வெளியை மூடிய சவுதி அரேபியா; பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை..!
Iran missile attack on US military base in Qatar
வளைகுடா நாடான கத்தார் தலைநகர் தோஹா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பெயர் பெற்ற இந்த நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் அமைந்துள்ளது. அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் தவிர்த்த பிற உலக நாடுகளில், அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக கருதப்படுவது கத்தார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கியுள்ள நிலையில், அதற்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத ஈரான், அந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்படி, அந்நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் வழிமறித்து முறியடித்து வருகின்றன. இதனால் இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் போர் நீடித்து வருவதால் உலகம் நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டவர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன், கத்தார் நாட்டில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்றும் வெளியில் வரக்கூடாது என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, கத்தார் மற்றும் சவுதி அரேபியா தனது வான்வெளியை மூடியுள்ளது. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Iran missile attack on US military base in Qatar