வங்கதேசத்தில் வன்முறை: இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்; மாணவர் தலைவர் மரணத்தால் பெரும் பதற்றம்!
Indian embassy Bangladesh attacked with stones
வங்கதேச மாணவர் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி காலமானதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகச் சட்டோகிராமில் (Chattogram) உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தூதரின் இல்லம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவுத் தாக்குதல்:
நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சட்டோகிராமில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தூதரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பாதுகாப்புப் படையினர் தடுத்தபோதும், கூட்டத்தினர் தூதரகத்தின் மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
வன்முறைக்கான பின்னணி:
கடந்த வாரம் மர்ம நபர்களால் சுடப்பட்ட மாணவர் தலைவர் ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியதாகக் கூறி ஆத்திரமடைந்த மாணவர்கள், 'புரோதோம் அலோ' மற்றும் 'டெய்லி ஸ்டார்' ஆகிய பிரபல நாளிதழ் அலுவலகங்களுக்குத் தீ வைத்தனர்.
தற்போதைய சூழல்:
அவாமி லீக் கட்சிக்குச் சொந்தமான இடங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது போராட்டக்காரர்களிடையே இந்திய எதிர்ப்பு மனநிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது.
English Summary
Indian embassy Bangladesh attacked with stones