தாய்லாந்து- கம்போடியா மோதல்; 1100 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில் சேதம்: இந்தியா மற்றும் யுனெஸ்கோ கவலை..!
India and UNESCO concerned as 1100 years old Hindu temple damaged in Thailand and Cambodia conflict
கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் தாய்லாந்தின் வடகிழக்கில் உள்ள சிசாக்கெட் மாகாண எல்லையில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 'பிரீயா விஹார்' கோவில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையில் சமீபநாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில், 1100 ஆண்டுகள் பழைமையான 'பிரீயா விஹார்' கோவில் சேதம் அடைந்துள்ளமை இந்தியாவை கவலையடைய செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:

''பாதுகாக்கப்பட்ட கோவிலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் துரதிர்ஷ்டவசமானது. கவலைக்குரிய விஷயம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான பிரீயா விஹார் கோவிலானது, கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கிறது. அதனை பாதுகாப்பதில் இந்தியா முன்னின்று பணியாற்றி வருகிறது.
பாதுகாக்கப்பட்ட தளத்தையும் அதனுடன் தொடர்புடைய இடங்களையும் முழுமையாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மனதார நம்புகிறோம். இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்கவும், பகையை நிறுத்தவும் பதற்றம் மேலும் அதிகரிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் அமைதியின் பாதைக்குத் திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரத்தில், யுனெஸ்கோ அமைப்பும் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''கலாசார சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சூழ்நிலை அமைதியானதும் தேவையான எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
India and UNESCO concerned as 1100 years old Hindu temple damaged in Thailand and Cambodia conflict