எரிபொருள் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி...? - எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா...!
End fuel crisis America loaned 50 million barrels crude oil to oil companies
வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள போர் பதற்றம் உலக பொருளாதாரத்தின் இதயத் துடிப்பையே அசைத்துள்ளது. தொடர்ந்து தீவிரமடைந்து வரும் அரசியல் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கிடைப்பதிலும் கடுமையான நெருக்கடி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் அமெரிக்காவிலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. பல தசாப்தங்களாக விமான சேவையில் தடம் பதித்திருந்த பிரபல ஸ்பிரிட் ஏர் லைன்ஸ் நிறுவனம் செயல்பாட்டை நிறுத்தியிருப்பது உலக வர்த்தக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களும் மூலப்பொருள் பற்றாக்குறையால் செயலிழக்கும் அபாய விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த அவசர சூழ்நிலையை சமாளிக்க அமெரிக்க அரசு போர் கால அவசரத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. நாட்டின் மூலோபாய பாதுகாப்பு எண்ணெய் களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெயில் இருந்து சுமார் 9 கோடி பீப்பாய்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடக்க கட்டமாக தற்போது 5.33 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ExxonMobil, Marathon Petroleum மற்றும் Trafigura உள்ளிட்ட ஒன்பது முக்கிய நிறுவனங்கள் பயனடைகின்றன.அவற்றில் டிராபிகுரா நிறுவனம் மட்டும் சுமார் 1.3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கடன் அடிப்படையில் பெறப்படும் எண்ணெயை, 2029-ஆம் ஆண்டுக்குள் கூடுதல் இருப்புடன் மீண்டும் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்க நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பெறப்பட்ட எண்ணெய்க்கு மேலாக 24 சதவீதம் கூடுதல் கச்சா எண்ணெய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.உலகளாவிய எண்ணெய் சந்தையில் உருவாகியுள்ள இந்த அசாதாரண பரபரப்பு, எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
English Summary
End fuel crisis America loaned 50 million barrels crude oil to oil companies