வெள்ளத்தில் அடித்துச் சென்ற வங்கிப் பணப்பெட்டகம்...பணத்தை அள்ளிய 29 பேர் அதிரடி கைது...!
Bank vault washed away by flood 29 people arrested for stealing money
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பணப்பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப் பேரிடரால் மக்கள் உயிரைக் காப்பாற்ற போராடிய நிலையில், கிடைத்த பணத்தை சிலர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோகோசி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் வங்கிப் பணப்பெட்டகம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளநீரில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணப்பெட்டகம், தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.அப்போது அங்கு சென்ற சிலர் பணப்பெட்டகத்தை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவலர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.விசாரணையின் அடிப்படையில், பணத்தை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட 29 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 92 லட்சத்து 68 ஆயிரம் நேபாள ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் தாடிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பணப்பெட்டகம் எந்த வங்கிக்கு சொந்தமானது, அதில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பு எவ்வளவு, இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்கக் காதணியை திருடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, காவலர்கள் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
பேரிடரில் சிக்கி மக்கள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பணத்தை எடுத்துச் சென்றதும், உயிரிழந்தவரின் உடலில் இருந்த நகையை திருடியதும் நேபாளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bank vault washed away by flood 29 people arrested for stealing money