'எந்தக் குழந்தையும் அவமானத்தால் துயர முடிவை எடுக்கக் கூடாது'..! - சிறுமி மரணம் குறித்து கனிமொழி உருக்கம்...!
No child should have make tragic decision out of shame Kanimozhi Urukkam death girl
உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பள்ளியில் சேர்ந்து தனது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் கனவுடன் சென்ற சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காக சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தங்களது மகளின் எதிர்காலம் குறித்து கனவு கண்டிருந்த குடும்பத்தினர், இந்தத் துயரச் சம்பவத்தால் நிலைகுலைந்து நிற்கின்றனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய மரியாதை, கண்ணியம் மற்றும் அச்சமற்ற, பாதுகாப்பான கல்விச் சூழல் கிடைப்பது அடிப்படை உரிமையாகும். பள்ளிக்குச் செல்லும் எந்தக் குழந்தையும் அவமானம் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகாத வகையில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
இதுபோன்ற துயரமான சூழ்நிலைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக்கூடாது. இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமியின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் துயரத்துக்கு நீதி கிடைப்பதே இந்தச் சூழலில் முதன்மையான கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
No child should have make tragic decision out of shame Kanimozhi Urukkam death girl