அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா திட்டம் அறிமுகம்: டிரம்ப் அதிரடி நடவடிக்கை!
America permanent visa Donald Trump
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், குடியேற்றம் மற்றும் எச்-1பி விசாக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தற்போது நிரந்தரக் குடியுரிமைக்காக 'கோல்டு கார்டு' (தங்க அட்டை) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டினர் அமெரிக்க அரசாங்கத்திற்குக் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாகத் தங்கும் அந்தஸ்தைப் பெற முடியும். ஆரம்பத்தில் அதிக கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விசா திட்டத்தின் கீழ், தனிநபர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ₹8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் குடியுரிமை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் கூடுதலாக $15,000 செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
கோல்டு கார்டு விற்பனையை வெள்ளை மாளிகையில் அறிமுகப்படுத்திய அதிபர் டிரம்ப், "கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது, ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் பில்லியன் கணக்கான டாலர்கள் நிதி அனைத்தும் அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும், கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும். இது நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய உதவும்" என்று தெரிவித்தார்.
மேலும், திறமையாளர்களைச் சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள பெருநிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த கோல்டு கார்டு விசா, கிரீன் கார்டைப் போலவே, தேசியப் பாதுகாப்பு அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளையும் விண்ணப்பத்தில் சேர்க்க முடியும்.
English Summary
America permanent visa Donald Trump