இஸ்ரேலுக்கு சவால் விட்ட சிலமணி நேரத்தில், ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கொலை!
Ali Mohammad Naini spokesperson for Iran killed
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்நிலை ராணுவத் தலைவரான அலி முகமது நைனி, அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இன்று கொல்லப்பட்டார்.
நடந்தது என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஈரானின் ஏவுகணை தயாரிப்புத் திறன் சிதைக்கப்பட்டுவிட்டது" என்று நேற்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, "போர்ச் சூழலிலும் நாங்கள் தொடர்ந்து ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறோம்; ஆயுதக் கையிருப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று அலி முகமது நைனி வீரவசனம் பேசினார். சவால் விடுத்த சில மணிநேரங்களிலேயே, இன்று அதிகாலை அமெரிக்க ராணுவம் நடத்திய 'கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில்' அவர் வீரமரணம் அடைந்ததாக ஈரானின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தொடரும் இழப்புகள்:
ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி, பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது செய்தித் தொடர்பாளர் நைனியும் கொல்லப்பட்டிருப்பது ஈரானுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. 20 நாட்களைக் கடந்து நீடிக்கும் இந்தப் போரில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஈரானிய ராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் முக்கியத் தலைவர்கள் வரிசையாகக் குறிவைக்கப்படுவது அந்த நாட்டின் ராணுவக் கட்டமைப்பில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ali Mohammad Naini spokesperson for Iran killed