காலிஸ்தான் பிரிவினைவாதத்தை எதிர்த்து வந்த பிரபல பெண் யூடியூபர் மர்ம நபர்களால் படுகொலை; கனடா போலீசார் தேடுதல் வேட்டை..!
A famous Canadian female YouTuber who opposed Khalistan separatism was murdered by unidentified assailants
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பஞ்சாபிகள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபர் பஞ்சாபை சேர்ந்த 45 வயதான நான்சி கிரேவால். இவர் கனடாவின் அண்டாரியோ மாகாணத்தில் விண்ட்சர்-எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள லாசெல் நகரில் வசித்து வந்தார்.
கடந்த மார்ச் 03 ஆம் தேதி இரவு சுமார் 09:30 மணியளவில் அவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, வீட்டிற்குள் இருந்த நான்சியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நான்சியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யூடியூபர் ஆன உயிரிழந்த நான்சி காலிஸ்தான் பிரிவினைவாதத்தை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார். குறிப்பாக, தடைசெய்யப்பட்ட SFJ அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் மற்றும் அவரது பிரிவினைவாத கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

அதாவது பிரச்சினைகள் இருந்தால் இந்தியாவிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்; வெளிநாடுகளில் இருந்துகொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது என்று நான்சி பேசி வந்துள்ளார். இதனால், நான்சிக்கு காலிஸ்தான் பிரிவினைவாத கும்பலால் கடும் மிரட்டல் இருந்து வந்த சூழலில், அவர் கொல்லப்பட்டிருப்பதால் கொலையாளிகள் யார்? என்பது குறித்து அண்டாரியோ மாகாண போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
English Summary
A famous Canadian female YouTuber who opposed Khalistan separatism was murdered by unidentified assailants