ஆங்கிலம் தெரியாததால்,7,200 பேர் பணிநீக்கம்; அமெரிக்காவில் தவிக்கும் பஞ்சாப், அரியானா ஓட்டுநர்கள்..!
7200 drivers fired in the US for not knowing English
அமெரிக்காவில் வர்த்தக ரீதியான லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள், பொதுமக்களுடன் உரையாடவும், சாலை விதிக் குறியீடுகளைப் புரிந்துக் கொள்ளவும், போக்குவரத்து போலீசாரிடம் பேசுவதற்கும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி முறையாகும்.
அந்நாட்டில் இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சில கோரமான நெடுஞ்சாலை விபத்துகளுக்குப் பிறகு, மொழிப் பிரச்சினை மற்றும் உரிமம் வழங்கும் தரநிலைகள் குறித்த கவலைகள் எழுந்ததால், இந்த விதி தற்போது மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இந்த ஆண்டு மட்டும் சாலையோர ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்த 7,200க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் உடனடியாகப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி டிரக்கர்ஸ் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி, 'சாலைப் பாதுகாப்பிற்கு ஆங்கில மொழிப் புலமை அவசியம்' என்று திட்டவட்டமாகக் அறிவித்துள்ளார்.
English Summary
7200 drivers fired in the US for not knowing English