ஐஎஸ் தீவிரவாதிகள் 150 பேர் சிரியாவில் இருந்து ஈராக் சிறைக்கு மாற்றம்: அமெரிக்கா ராணுவம் அதிரடி..!
150 ISIS militants transferred from Syria to an Iraqi prison
சிரியாவில் உள்ள சிறைகளில் இருந்து 150 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக் நாட்டிற்கு மாற்றும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது.
சிரியாவில் குர்திஷ் தலைமையிலான படைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகள் சிரியா அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளில் இருந்து தீவிரவாதிகள் தப்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷத்தாடி சிறையில் இருந்து ஏற்கனவே, சிலர் தப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் பாதுகாப்பு கருதி சிறைக்கைதிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முதற்கட்டமாக 150 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக் சிறைகளுக்கு அமெரிக்க ராணுவம் அதிரடியாக மாற்றியுள்ளது. இது குறித்துப் அமெரிக்க தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கூறுகையில், 'ஐஎஸ் அமைப்பைத் தோற்கடிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஈராக் அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம் மாற்றப்பட்டவர்களில் துனிசியா, தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆபத்தான தலைவர்கள் உள்ளனர். மொத்தமாக 7000 கைதிகளை ஈராக்கிற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஈராக் எம்.பி மிக்தாத் அல்-கபாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சிரியா அரசு இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
English Summary
150 ISIS militants transferred from Syria to an Iraqi prison