மெக்சிகோவில் பயங்கரம்: மத நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் வெறிச்செயல்: 12 பேர் பலி; 20 பேர் படுகாயம்...!
12 killed 20 injured in shooting at religious celebration in Mexico
மெக்சிகோவில் நடந்த மத நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளதோடு, 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் உள்ளூர்வாசிகள், மதுபானம் அருந்தி கொண்டு, நடனமாடி உற்சாகமாக இருந்துள்ளனர்.
அந்த நிலையில், கொண்டாட்டம் நடைபெறும் இடத்திற்கு மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் புகுந்து, தன வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ் கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று கடந்த மாதம் குவானாஜுவாட்டோ மாகாணத்தின் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் சர்ச் சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான் ஜுவாடோ, நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாகும்.அங்கு கடந்த 05 மாதங்களில் மட்டும் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது பிற மாகாணங்களில் நடந்துள்ள கொலைகளை விட 02 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
12 killed 20 injured in shooting at religious celebration in Mexico