படத்தை விமர்சிக்க தடை விதிக்க முடியாது: சினிமா விமர்சனத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்..!
Madras High Court dismisses case seeking ban on cinema criticism
புதிதாக வெளியாகும் சினிமா படங்கள் குறித்து 03 நாட்கள் ஆன்லைனில் விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு வந்தது. அப்போது, புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அத்துடன், படம் தொடர்பில் நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதனை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும் என்று அதிரடியாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்காது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளமை தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தெரிகிறதாகவும், புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில், சமூக வலைதளங்களில் நீதிபதியையும் விமர்சனம் செய்வதை பார்க்கலாம். அதனால், அனைத்தையும் தடுக்க முடியாது. இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து விமர்சனம் செய்வார். அப்போது என்ன செய்வீர்கள் என்று தயாரிப்பாளர்களை கேள்வி எழுப்பியுள்ளார். தயாரிப்பாளர்கள் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள் என்றும், அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது என்றும், சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள், அமைப்புகள், எந்த நாடும் தப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே வழி என்றும், மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும், படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
English Summary
Madras High Court dismisses case seeking ban on cinema criticism