வீழ்ந்தாலும் எழும் இஸ்ரோ! தோல்வி பாடங்களை ஆய்ந்து ஜூனில் சக்திவாய்ந்த PSLV ஏவுதலுக்கு தயார்...!
ISRO rises even after fall After analyzing lessons from failure preparing powerful PSLV launch June
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உலக அரங்கில் அதிக வெற்றி விகிதம் பெற்ற ஏவுகணை எனப் பெயர் பெற்ற பி.எஸ்.எல்.வி. (PSLV) ராக்கெட்டின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. 90 சதவீதத்திற்கும் மேலான வெற்றியைப் பெற்ற இந்த ராக்கெட், இஸ்ரோவின் நம்பகமான ‘வேலைக்குதிரை’ என அழைக்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட PSLV-C61, இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்றபோது, 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இலக்கை அடையாமல் பயணம் தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் PSLV-C62 ராக்கெட்டில் டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய இ.ஓ.எஸ்-01 மற்றும் சில வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. அதிலும் அதேபோன்று 3-வது கட்ட கோளாறு ஏற்பட்டதால் திட்டம் வெற்றியடையவில்லை.
இதனால் தொடர்ச்சியாக இரண்டு PSLV ஏவுதள முயற்சிகள் தோல்வியடைந்தது கவலை ஏற்படுத்தியது.மேலும், கடந்த ஆண்டு ஏவப்பட்ட NVS-02 வழிசெலுத்தல் செயற்கைக்கோளும், ‘திரஸ்டர் வால்வு’ செயலிழப்பு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது.
இந்த பின்னணியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், “ஒவ்வொரு தோல்விக்கும் காரணங்களை கண்டறிய உள் மற்றும் வெளிப்புற நிபுணர்கள் கொண்ட தனித்தனி ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறைகளை சரிசெய்து, முழுமையான சோதனைகளுக்குப் பிறகு, சக்திவாய்ந்த PSLV ராக்கெட்டை ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ திட்டமிட்டுள்ளோம். இம்முறை வெற்றி நிச்சயம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தோல்விகளை தாண்டி மீண்டும் எழும் இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சலுக்காக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
ISRO rises even after fall After analyzing lessons from failure preparing powerful PSLV launch June