காதல் திருமணம் செய்த கணவர் தொடர்பு துண்டிப்பு: சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டம்..!
Young woman stages dharna at Sivaganga SP office demanding to keep husband she married for love
சிவகங்கையில் காதல் திருமணம் செய்த கணவரை சேர்த்து வைக்கக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் கோவை இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் குகன் (25). இவர், கோவையில் உள்ள கல்லூரியில் படித்தபோது, அதே கல்லூரியில் படித்த ஷாமிலி (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். குகன் தற்போது சிங்கப்பூர் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சொந்த ஊர் திரும்பிய குகன், கோவைக்கு சென்று ஷாமிலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் மானாமதுரை திரும்பிய குகன் ஷாமிலியுடன் தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில், தனது கணவரை தேடி ஷாமிலி மானாமதுரை வந்தபோது அவரால் குகனை தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் ஷாமிலி புகார் அளித்துள்ளார்.

அத்துடன், நேற்று சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளார். அதாவது, தனது புகார் தொடர்பாக மானாமதுரை மகளிர் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறி போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்த திடீர் போராட்டத்தால் எஸ்பி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், ஷாமிலியை சமாதானம் செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Young woman stages dharna at Sivaganga SP office demanding to keep husband she married for love