பைக் மீது லாரி மோதி விபத்து - பேரனை காப்பாற்றி விட்டு உயிரிழந்த பெண்.!!
women died for accident in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி மகேஸ்வரி. இந்தத் தம்பதியினர் நேற்று பேரன் சிவ நித்தீஷுடன் இருசக்கரவாகனத்தில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அதன் படி அவர்கள் மொட்டமலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. எப்படியும் விபத்தில் பலியாகி விடுவோம் என்று உணர்ந்த மகேஸ்வரி சட்டென்று குழந்தையை தூக்கி சாலையோரத்தில் வீசிவிட்டார்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து பெரியசாமி தூக்கி வீசப்பட்டு காயத்துடன் சாலையின் ஓரத்தில் கிடந்தார். மகேஸ்வரி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இருப்பினும் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சாலை ஓரத்தில் அலறிய குழந்தையை மீட்டனர். பின்பு சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த குழந்தை மற்றும் பெரியசாமியையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து லாரியுடன் தப்பிய ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
women died for accident in madurai