கேளம்பாக்கத்தில் பரபரப்பு; மயானம் அருகே முகம் சிதைக்கப்பட்டு ரௌடி படுகொலை: பழிக்கு பழியா..? தனியாக தொழில் நடத்தியதால் முன்விரோதமா..?
Was revenge the reason for the rowdy murder with his face disfigured near the cemetery in Kelambakkam
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்தவர் ஷாகுல் அமீது (27). இவர் அங்குள்ள கே.எஸ்.எஸ்.நகரையொட்டி உள்ள மயானம் அருகே முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் தமிழன்பன் ஆகியோரின் தலைமையில் போலீசார் சென்று விசாரணை செய்தனர்.
அதன் பின்னர் ஷாகுல் அமீது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை குறித்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது ஷாகுல் அமீது மீது பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல், செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அத்துடன், இவர் கிரேடு ஒன்று ரவுடி பட்டியலில் உள்ளார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன் கூட்டாளியாக இருந்து, பல்வேறு குற்றச்சம்பவங்களை செய்துள்ளார். அதன் பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஷாகுல் அமீது சிறைக்கு இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மாலை 06.30 மணியளவில் மயான பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது ஷாகுல் அமீதை மர்ம நபர்கள் முகம் சிதைத்து, வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில், ஷாகுல் அமீதை கொலை செய்ய பயன்படுத்திய பொருட்கள், பைக்குகள், ரத்த மாதிரிகள் உள்பட பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொளத்தூர் ரவுடியுடன் சேர்ந்து ஷாகுல் அமீது நடத்திய ஒருகொலை தொடர்பாக அவரை பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை மர்ம நபரில் ஒருவன் செல்போனில் வைத்திருந்து தனது கூட்டாளிகளுடன் ஷாகுல் அமீது பழிக்குப் பழியாக கொலை செய்ய காத்திருந்ததும் முன்னர் செய்த கொலையைபோல் இவரையும் முகம் சிதைத்து கொலை செய்வோம் என்று அந்த மர்ம கும்பல் சபதம் எடுத்து ஷாகுல் அமீதை கண்காணித்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகவே, ஷாகுல் அமீது சிறையில் இருந்து வந்தவுடன், சமையம் பார்த்து பழிக்குப்பழியாக கொலை நடந்ததா..? அல்லது தனியாக தொழில் நடத்தியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா..? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். அத்துடன், கொளத்தூர் ரவுடியை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Was revenge the reason for the rowdy murder with his face disfigured near the cemetery in Kelambakkam