மகாராஷ்டிராவில் கொய்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளியேறிய கரும்புகை; நடைமேடையில் குதித்து அலறியடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு..!
Koyna Express Fire Scare in Maharashtra
மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பிரேக் திடீரென பழுதாகி புகை கிளம்பியதால், பயணிகள் ரயிலில் இருந்து அலறியடித்து குதித்து உயிரை காக்க ஓடிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.
நேற்று மாலை கர்ஜத் ரயில் நிலையத்திற்கு கொய்னா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயிலின் சக்கரங்களை இயக்கும் பிரேக் பகுதி திடீரென இறுகிப் பிடித்துக்கொண்டது. இதன் காரணமாக ரயில் சக்கரங்களில் கடுமையான உராய்வு ஏற்பட்டு, ரயில் பெட்டிகளைச் சுற்றி திடீரென அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது.
இதனால் ரயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாக நினைத்த பயணிகள், அச்சத்தில் கூச்சலிட்டவாறு நடைமேடையில் குதித்து அலறியடித்து ஓடியுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாகச் செயல்பட்டு பிரேக் பிரச்சினையை முழுமையாக சரிசெய்துள்ளனர். அதன்பின்னர் மாலை 06.26 மணி முதல் 06.36 மணி வரை சுமார் 10 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர். அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
English Summary
Koyna Express Fire Scare in Maharashtra