விழுப்புரத்தை அதிரவைத்த சம்பவம்.. அன்புஜோதி ஆசிரமத்திற்கு சீல்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!
Villupuran Anbujyothi Ashram was sealed by district collector
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லாஹ் உட்பட 53 பேரை பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 பேர் தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் ஜபருல்லாஹ்வின் உறவினர்கள் விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று கேட்டபொழுது ஜபருல்லா தப்பி சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜபருல்லாஹ் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையினர் காணாமல் போன நபர் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடத்திய விசாரணையில் ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த ஊனமுற்றோர் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்தியதாகவும் குரங்குகள் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவரையும் மீட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து உரிய அனுமதி இன்றி ஆசிரமம் நடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின் பெயரில் தற்பொழுது அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Villupuran Anbujyothi Ashram was sealed by district collector